கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் வகையில் புது வருட விடுமுறைக் காலங்களில் வீடுகளில் இருக்குமாறு கனடா சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியபோதும் இந்தக் காலத்தில் 48 வீதமான கனேடியர்கள் குடும்பத்தினருடனோ அல்லது நண்பர்களுடனோ வெளியே சென்றுள்ளதாக கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கின்றது.
இணையத்தளம் ஊடாக லெகர் நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் 1,506 கனடியர்கள் பங்கேற்றனர்.
இந்தக் கணிப்பீட்டில் பங்கேற்றுப் பதிலளித்த கனேடியர்களில் 52 வீதம் பேர் விடுமுறை நாட்களில் தங்கள் வீட்டுக்கு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளனர்.
34 வீதம் பேர் தாங்கள் ஒரு முறை குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வெளியே சென்றதாகக் கூறியுள்ளனர். 12 வீதம் பேர் தங்கள் வீட்டிற்கு வெளியே உள்ளவர்களுடன் இரண்டு அல்லது மூன்று முறை வெளியே சென்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இரண்டு வீதம் பேர் வீட்டுக்கு வெளியே உள்ளவர்களுடன் மூன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வெளியே சென்றதாக கூறியுள்ளனர்.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக விடுமுறை நாட்களில் தங்கள் சொந்தக் குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே ஒன்றுகூடுமாறு மத்திய அரசும், ஒன்ராறியோ உள்ளிட்ட சில மாகாணங்களின் முதல்வர்களும் வலியுறுத்தினர்.
எனினும் இந்தக் கோரிக்கைகளை 48 வீதமான கனேடியர்கள் புறக்கணித்துள்ளதை கருத்துக் கணிப்பு வெளிப்படுத்துகிறது.
டிசம்பர் 30 முதல் ஜனவரி 3 வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக் கணிப்பில் பதிலளித்த கனேடியர்களில் 62 சதவீதம் பேர் அடுத்த சில வாரங்களில் கனடாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என என நம்பவில்லை எனக் கூறியுள்ளனர்.
இதேவேளை, கருத்துக் கணிப்பில் பங்கேற்ற கனேடியர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் தாங்கள் கோவிட் -19 தடுப்பூசி பெற திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.
62 சதவீதம் பேர் கோவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான மத்திய அரசின் போராட்டம் குறித்து திருப்தி அடைவதாகக் தெரிவித்துள்ளனர்.
Category: உலகம், புதிது
Tags: கொரோனா (COVID-19), கனடா